மிதக்கும் கவிதைப் பிரபஞ்சத்தின் துளியை முகர்ந்து பார்க்கும் சொற்களில் இமாம் அத்னான் பயணிக்கிறார். இயற்கையின் துண்டுப்பட்ட அங்கங்களை கவிதைக்குள் உயிர்ப்பிக்கும் கலைநுட்பம் இதிலுண்டு. உலகின் அனைத்து ஜீவராசிகளையும் தழுவிப்பரவும் விசாலமான மனம் புனைவின் பரப்புக்குள் நீந்திக் களிக்கிறது. படைப்பு,படைப்பாளி தாண்டிய புலத்தில் வாசகனின் பிரதியாக மாறும் தருணங்களையும் இப்படைப்புலகம் கொண்டிருக்கிறது.
பிரதிபலித்தலில் துவங்கிய யதார்த்தம் பிரதிநிதித்துவப் படுத்தலில் தனக்கொரு இடத்தை தக்க வைப்பதுண்டு. யதார்த்த புலம்சார் நெருக்கடிகளிலிருந்து தப்பித்த அத்னானின் கவிதை தீவிர புனைவின் வெளியில் தனக்கான இடத்தை தேடிக்கண்டுபிடிக்கிறது. கவிதைக்குள் நிகழும் நுண்கதையாடல்கள் இப்புனைவுகளில் தென்படும் விசித்திரமாகிறது.