பெரும்பாலான எழுத்தாளர்களின் முதல் தொகுப்பிலுள்ள கதைகள் அனேகமாகத் தன்னிலையில் எழுதப்பட்டவையாக இருக்கும். ஒரு வகையில் அதுவே எழுதுபவனுக்கு நெருக்கமான வடிவமாகவும் இருக்கக்கூடும் . ஆனால் லக்ஷ்மி சிவகுமாரின் கதைகள் வெகு எளிதாக இந்த நிலையைக் கடந்து செல்லும் அதே வேளையில் கதாபாத்திரங்களுக்கு மிக நெருக்கமானதாகவும் அமைகின்றன. வெவ்வேறு நிலவெளிகளையும் மனிதர்களையும் அவருடைய கதைகள் நம்முன் விரிக்கின்றன. குழந்தைகளின் அக உலகையும் நெருங்கிப் பார்க்க விழையும் கதைகள். தனக்குப் பரிச்சயமற்ற தளங்கள் உட்பட எல்லாவற்றையும் எழுதிப் பார்க்க முனையும் தைரியம் இவருடைய பலமென்றால் தேவைக்கதிகமாக நீளும் வாக்கியங்களும் முன் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளைக் கொண்டு கதைகளைச் சட்டென்று முடித்துக் கொள்வதும் பலவீனம் என்று சொல்லலாம். தன்னுடைய கதைகளின் வழியே தனக்கானதொரு தனித்தவமான இடத்தைக் கண்டடைவார் என்பதைச் சொல்லும் கதைகளைக் கொண்டிருக்கும் தொகுப்பு லங்கூர். - கார்த்திகை பாண்டியன்